நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் மோகினி எல்ல அருகே கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஓடையில் விழுந்ததில், பருவகாலம் அல்லாத நிலையில் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வந்திருந்த ஐவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த சிலர் நேற்று (19) இரவு சுமார் 11.00 மணியளவில் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஸ்ரீ பாத யாத்திரை செல்வது தொடர்பில் அறிவித்துள்ளனர்.
எனினும், நிலவிய மோசமான காலநிலை காரணமாக இரவு நேரத்தில் பயணிக்க வேண்டாம் என்றும், மறுநாள் காலை மீண்டும் வருமாறும் பொலிஸ் அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பொலிஸாரின் அறிவுறுத்தலின்படி தங்குமிடத்தை தேடி திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது, நள்ளிரவு 12.00 மணியளவில் மோகினி எல்ல அருகே கார் வீதியில் சறுக்கி ஓடையில் விழுந்துள்ளது.
விபத்து இடம்பெற்றபோது காரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பயணித்துள்ளனர். கார் கடுமையாக சேதமடைந்த போதிலும், அதில் பயணித்த ஐவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




