மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான ஏழு மாத காலத்தில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமையக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை, நடனக் கல்லூரி விடுதியில் 20 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று (19) நண்பகல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த குறித்த மாணவி, நாடகத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்லூரியில் தனது கற்கைநெறியை ஆரம்பித்துள்ளார். அவர் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்ததுடன், கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நண்பகல் சுமார் 12 மணியளவில் விடுதி அறையில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனைக் கண்ட இரு மாணவிகள் அதிர்ச்சியடைந்து மயங்கி வீழ்ந்ததையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் மூவரையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
எனினும், தூக்கில் தொங்கிய மாணவி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும், மயங்கி வீழ்ந்த இரு மாணவிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் எட்டு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், 2025ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒரு வருட காலத்தில் 164 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.




