கண்டி, வத்தேகம பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் போலியானது என உண்மைச் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக சிறுமியின் புகைப்படங்களுடன் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வந்தன.
எனினும், வத்தேகம பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமி உயிருடன் இருப்பதுடன், கண்டி தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையும் சிறுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, வத்தேகம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறுமி உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் பதிவுகள் உண்மையற்றவை எனவும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மூலம்: Fact Crescendo Sri Lanka




