ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘கஞ்சிபானி இம்ரான்’ என்பவரின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படும் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி நண்பகல் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. தற்போது பிரான்ஸில் தங்கியிருப்பதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘குடு அஞ்சு’ என்பவர் இந்தக் கொலையை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமும் சந்தேகநபர் பெண்ணிடமும் இருந்து 25 கிராம் 840 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 21 வயதான சந்தேகநபரும் 23 வயதான சந்தேகநபர் பெண்ணும் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்ற மூன்று சந்தேகநபர்கள் 12 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 19, 25 மற்றும் 28 வயதுடையவர்கள் என்றும், மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியாவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை இலக்காகக் கொண்டு கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் சுமார் 1.20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின்னர் தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
‘குடு அஞ்சு’ என்பவரின் நெருங்கிய ஒருவரை இரத்மலானை பகுதியில் கொலை செய்த சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.




