1996ஆம் ஆண்டு முல்லைத்தீவு, குமாரபுரம் பகுதியில் 24 தமிழ் பொதுமக்களை கொலை செய்து மேலும் 25 பேரை காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஆறு முன்னாள் இராணுவ வீரர்களின் வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், இருவரும் தனித்தனியாக தீர்ப்புகளை அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பின்போது பதிவு செய்யப்பட்ட சில அறிக்கைகளை குறியிடுவதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்காதது பாரதூரமான தொழில்நுட்ப குறைபாடு என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா முன்வைத்த வாதத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
உத்தியோகபூர்வ முத்திரை அல்லது திகதி இல்லை என்பதைக் காரணம் காட்டி குறித்த ஆவணங்களை நிராகரிப்பது பொருத்தமானதல்ல எனவும், அந்தச் சாட்சியங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதிலேயே நீதிமன்றம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் எனவும் நீதிபதி சுமுது பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
1996 பெப்ரவரி 11ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக 101 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆறு முன்னாள் இராணுவ வீரர்களும் 2016ஆம் ஆண்டு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
பிரதிவாதிகளான முன்னாள் இராணுவ வீரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வலலியத்த முன்னிலையாகியிருந்தார்.




