இலங்கையில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி இந்தியா ஊடாக வெளிநாடுகளுக்கு செல்லும் குற்றவாளிகளை கைது செய்வதற்காக வடக்கு கடற்பரப்பில், குறிப்பாக பாக்கு நீரிணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பல குற்றவாளிகள் மன்னார் கடற்பரப்பு வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், வத்தளை பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 34 மற்றும் 35 வயதுடைய இரு முக்கிய சந்தேகநபர்கள் மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற நிலையில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இரு சந்தேகநபர்களும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை கொழும்பு வடக்கு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடத்தல்காரர்களின் உதவியுடன் இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத தப்பிச் செல்லல்களைத் தடுப்பதற்காக வடக்கு கடற்பரப்பில் கடற்படை மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.




