நுவரெலியா, சீத்தாஎலிய பகுதியில் வசிக்கும் முஸ்லிம் பெண்ணொருவருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக பாதையொன்றைப் பெற முயற்சித்த சம்பவத்தில் அவரது அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நோனா பட்டோன் மற்றும் United Human Rights Organization அமைப்பின் தலைவர் ஆகியோர் முன்வைத்த முறைப்பாடு (HRC/HAT/58/26/N) தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் பின்னர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நுவரெலியா–ஹட்டன் பிராந்திய இணைப்பு அதிகாரி எச்.கே. விதான, நுவரெலியா பிரதேச செயலாளருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, ஐ.கே.ஜி. உபசேன என்ற நபருக்கு வேறு அணுகல் பாதை இருந்தபோதிலும், நோனா பட்டோனுக்குச் சொந்தமான 478/A/86 என்ற வருடாந்த அனுமதிப்பத்திரக் காணியின் ஊடாக சட்டவிரோதமாக பாதையொன்றைப் பெற முயற்சித்ததன் காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் உரிய புரிதலின்றி தலையிட்டதும், மற்றைய தரப்பினர் சட்டத்திற்கோ அல்லது அரச அதிகாரிகளின் உத்தரவுகளுக்கோ கட்டுப்படாமல் தன்னிச்சையாகச் செயற்பட்டதும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மோதல் நிலைமையில் முறைப்பாட்டாளரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் விரோதமான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவரது இனத்துவ அடையாளமும் இந்தத் துன்புறுத்தலுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தபோதிலும், குற்றத்தின் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக முறைப்பாட்டாளர் உடல், உளவியல் மற்றும் கடுமையான பொருளாதார பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சுதந்திரமாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சட்டவிரோதமாகப் பயன்படுத்த முயற்சிக்கப்படும் அணுகல் பாதையை மூடுவதற்காக நிரந்தர வேலியொன்றை அமைப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் 2026 ஆகஸ்ட் 05ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.




