பேராதனை பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I) பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை சட்டவிரோதமானதும், நியாயமற்றதும், பாரபட்சமானதுமாக இடம்பெற்றுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த பதவிக்கு பௌத்த கற்கைகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் II) கலாநிதி இரோமி நிசங்சலா மெனிகே ஆரியரத்னவை நியமிக்குமாறு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தெரிவுச் செயன்முறையை சவாலுக்கு உட்படுத்தி கலாநிதி ஆரியரத்ன ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
நீதியரசர்களான ஆர். குருசிங்க மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம், அவரை குறித்த பதவிக்கு நியமிக்காத தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி ரிட் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2022 செப்டெம்பர் 22ஆம் திகதி மனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில், அவரை சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் I) பதவிக்கு நியமிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், 33ஆவது பிரதிவாதிக்கு வழங்கப்பட்டிருந்த சிரேஷ்ட விரிவுரையாளர் (தரம் II) பதவிக்கான நியமனத்தையும் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது. எனினும், 32ஆவது பிரதிவாதியான வணக்கத்திற்குரிய கலாநிதி திவுல்பலஸ்ஸே விமலானந்த தேரருக்கு வழங்கப்பட்டிருந்த தரம் II பதவிக்கான நியமனத்தை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த நியமனத்தையும் 2022 செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் முன்திகதியிட்டு அமுல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் முதுகலை நிறுவனத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக (தரம் II) பணியாற்றும் கலாநிதி ஆரியரத்ன, பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.
மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தரம் I பதவிக்குத் தகுதி பெற்ற ஒரே வேட்பாளர் அவரே என்றும், பௌத்த கற்கைகள் தொடர்பில் விசேட கல்வித் தகைமைகளை அவர் கொண்டிருந்ததாகவும் அவதானித்துள்ளது.
அவர் பௌத்த கற்கைகள் தொடர்பில் முதல் வகுப்பு கௌரவப் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளதுடன், 12 ஆண்டுகளுக்கும் மேலான கல்விசார் அனுபவத்தையும் கொண்டிருப்பதாக நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது.
தெரிவுச் செயன்முறையுடன் தொடர்புடைய விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், தீர்மானம் எடுக்கும் நடைமுறை சட்டவிரோதமானதும், பாரபட்சமானதும், நியாயமற்றதுமாக இருந்ததாகத் தீர்மானித்துள்ளது.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவுடன் ரன்மலீ மீபாகல ஆஜராகியிருந்தார்.




