யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் தன்னார்வத்துடன் நாட்டுக்குத் திரும்புவதற்கு குடிவரவு அனுமதி வசதிகளை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் இந்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக மீண்டும் நாட்டுக்குத் திரும்ப எதிர்பார்த்துள்ளவர்களுக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த வசதிகள் வழங்கப்படவுள்ளன.
புதிய நடைமுறையின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் அல்லது விமான நிலையம் வழியாகவோ அல்லது கடவுச்சீட்டு இன்றியோ நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு அரச புலனாய்வு சேவையின் பாதுகாப்பு அனுமதி அறிக்கை பெறப்படும்.
அவர்கள் கொலை, தேசத்துரோகம் போன்ற பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டால், தற்காலிக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, 1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்காமல் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் முறையற்ற வகையில் நாட்டைவிட்டு வெளியேறியவர்களுக்கும் அடையாளம் மற்றும் அரச புலனாய்வு சேவை அனுமதி உறுதி செய்யப்பட்ட பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அதிகாரங்களுக்கு அமைவாக எவ்வித சட்டத் தடையும் இன்றி நாட்டுக்குள் நுழைவதற்கான வசதிகள் வழங்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், கொலை, தேசத்துரோகம் அல்லது வேறு விசேட குற்றங்கள் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்படும் நபர்கள் நாட்டுக்கு வந்தால், அவர்கள் துறைமுகம் அல்லது விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவர்.




