நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அட்டபிரிகர மற்றும் பிக்குகளுக்கான பரிகாரப் பொருட்களை விற்பனை செய்யும்போது சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை பரிசோதிப்பதற்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
2026 ஆகஸ்ட் 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் 92 வெற்றிகரமான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 35 சுற்றிவளைப்புகளுடன், இந்த ஆண்டில் இதுவரை அட்டபிரிகர மற்றும் பரிகாரப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 127 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2015 ஜூன் 11ஆம் திகதியிடப்பட்ட 1918/20 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 55ஆம் கட்டளையின் கீழ், குறித்த பொருட்களில் அல்லது அவற்றின் பொதிகளில் குறிப்பிடப்பட வேண்டிய தகவல்கள் இடம்பெற்றுள்ளனவா மற்றும் சட்டரீதியான தேவைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விற்பனையாளர்கள் பராமரிக்க வேண்டிய பற்றுச்சீட்டுகள், விலைப்பட்டியல்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆவணங்கள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்புகளின்போது கண்டறியப்பட்ட பெரும்பாலான சட்ட மீறல்கள் 55ஆம் கட்டளையுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்டபிரிகர, தனிப்பட்ட சீவரம், அதனகட, பந்தபட்டி, பாத்திரங்கள் மற்றும் ஏனைய பரிகாரப் பொருட்களில் அல்லது அவற்றின் பொதிகளில் குறிப்பிடப்பட வேண்டிய தகவல்கள் இடம்பெறாமை முக்கியமாக கண்டறியப்பட்டுள்ளது.
சட்ட விதிகளை மீறிய அட்டபிரிகர, சீவரம், அதனகட, பந்தபட்டி, பாத்திரங்கள் மற்றும் ஏனைய பரிகாரப் பொருட்கள் அடங்கிய 436 பொருட்கள் அதிகாரிகளின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விசேட நடவடிக்கையின்போது அட்டபிரிகர பொதிகளின் வெளிப்புறத்தை மட்டும் பரிசோதிக்காமல், தற்செயலாக தெரிவுசெய்யப்பட்ட அட்டபிரிகர பொதிகளைத் திறந்து, அவற்றுக்குள் உள்ள பொருட்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அந்த பரிசோதனைகளில் சில அட்டபிரிகர பொதிகளில் இரட்டை சீவரத்திற்கு பதிலாக ஒற்றை சீவரம் இடம்பெற்றிருந்தமை, அட்டபிரிகரத்தில் இடம்பெற வேண்டிய எட்டு பொருட்களும் முழுமையாக இல்லாமை, விலைக்கு ஏற்ப பொருட்கள் மாற்றப்பட்டிருந்தமை, அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்கள், சேதமடைந்த பாத்திரங்கள் மற்றும் துருப்பிடித்த கத்திகள் இடம்பெற்றிருந்தமை போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறான முறைகேடுகளை வெளிப்புற பொதியை மட்டும் பார்ப்பதன் மூலம் நுகர்வோர் எளிதில் கண்டறிய முடியாது என்பதால், குறிப்பாக சமயத் தேவைக்காக முழுமையான அட்டபிரிகர தொகுப்பை வாங்கும்போது அதற்குள் உள்ள பொருட்கள் குறித்தும் கவனம் செலுத்துமாறு நுகர்வோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்புகளின்போது கண்டறியப்பட்ட சட்ட மீறல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அட்டபிரிகர மற்றும் பரிகாரப் பொருட்களை விற்பனை செய்யும்போது பொருட்கள் மற்றும் பொதிகளில் தேவையான தகவல்களை குறிப்பிடுதல், நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டரீதியான தேவைகளைப் பின்பற்றுதல் ஆகியவை விற்பனையாளர்களின் பொறுப்பு என அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.




