தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் போதைப்பொருட்களுடன் 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025 ஆகஸ்ட் 11ஆம் திகதி மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று திகன பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5,155 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 63,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திகன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவரது வீட்டில் மிகவும் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 1,250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், இரண்டு வாள்கள் மற்றும் கூர்மையான கத்தி ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




