ஜப்பானிய தடுப்பு நிலையத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலி தொடர்பில் வெளியிட்ட கருத்து காரணமாக ஜப்பான் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேலவையின் நீதித்துறை விவகாரங்களுக்கான குழுவில் இருந்து நீக்கப்படவுள்ளார்.
ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்ததன்படி, நிப்பொன் இஷின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மிசுஹோ உமேய்முரா, கடந்த 16ஆம் திகதி குடிவரவு கட்டுப்பாடு மற்றும் அகதிகள் தொடர்பான சட்டத் திருத்த வரைவொன்று குறித்த குழு விவாதத்தின்போது விஷ்மா சந்தமாலியின் மரணம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
விஷ்மா சந்தமாலி ஒருவரின் கோரிக்கையின் பேரில் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பானுக்குச் சென்ற விஷ்மா சந்தமாலி, விசா விதிகளை மீறியதாக 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நகோயா குடிவரவு தடுப்பு நிலையத்தில் பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் 2021 மார்ச் 6ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து ஜப்பானின் குடிவரவு சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்திய நிப்பொன் இஷின் கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுமிடகே ஃபுஜிட்டா, அந்தக் கருத்தின் அடிப்படையில் அவரை நீதித்துறை விவகாரங்களுக்கான குழுவிலிருந்து நீக்கி, எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது கருத்துக்காக விஷ்மா சந்தமாலியின் குடும்பத்தினரிடமும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




