2019ஆம் ஆண்டு ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் வசித்த பெண்ணொருவரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குறித்த நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
பொலிஸாரால் வெளியிடப்பட்ட தகவலின்படி, குறித்த நபரின் பெயர் ரணேபுர தேவகே ரணுக எரந்த விஜேதுங்கஎன்பதுடன், அவருக்கு 38 வயதாகும். அவரது முகவரி இலக்கம் 35/1, உக்கஹேன, வல்பொல, ராகம என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் ராகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 071 8591604 அல்லது குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை 071 9627561 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




