முறையானதும் பாதுகாப்பானதுமான பொதுப் போக்குவரத்து சேவையை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் தற்செயல் போதைப்பொருள் சோதனைத் திட்டத்திற்காக சுகாதார அமைச்சினால் மேலும் ஒரு நடமாடும் பஸ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீதி பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாண்டு மூலோபாயத் திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதன் கீழ் நடமாடும் போதைப்பொருள் சோதனைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியில் இருக்கும்போது போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை பரிசோதிக்கும் இந்த நடமாடும் சோதனைத் திட்டம் தற்போது நாட்டின் ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சோதனைகளுக்குத் தேவையான பௌதீக மற்றும் மனித வளங்களை படிப்படியாக மேம்படுத்துவதுடன், நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இந்த சோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்து உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த தேசிய தற்செயல் போதைப்பொருள் சோதனைத் திட்டத்தின் கீழ் இதுவரை 7,150 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன் குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




