மருத்துவர் இல்லாத காரணத்தால் அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு பிரிவு மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு விடுதிகள் மற்றும் வைத்தியர் உத்தியோகபூர்வ இல்லம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட இந்த வைத்தியசாலையில் தற்போது எந்தவொரு மருத்துவரும் பணியாற்றவில்லை எனவும், ஒரு பணியாளர் மாத்திரமே பணியில் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரேயொரு பெண் மருத்துவரும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கம்பிரிகஸ்வெவ, பலுகொல்லேவ, அலுத்த்கம உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சிகிச்சை பெறுவதற்காக அவர்கள் சுமார் 28 கிலோமீற்றர் தூரம் பயணித்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பிரதேசத்தில் நிலவும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இரவு நேரங்களில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக கம்பிரிகஸ்வெவ ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு பிரிவுக்கு உடனடியாக மருத்துவர் ஒருவரை நியமிக்குமாறு பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




