மீட்டியாகொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
2025 நவம்பர் 17ஆம் திகதி மீட்டியாகொட, அலுத்வல வீதி பகுதியில் உள்ள உணவகமொன்றில் பணப்பெறுப்பாளராக பணியாற்றிய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மீட்டியாகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தனது வசிப்பிடப் பகுதியை விட்டு தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளவர் கல்கேன கங்கானம்கே உபுல் குமார அல்லது “ஜம்பு” என அழைக்கப்படும் 39 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடுமுல்ல, களுபே, ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்தவர்.
இச்சந்தேகநபர் கந்தர மற்றும் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலும் தேடப்படும் நபராக உள்ளதுடன், பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சில வழக்குகளுக்கு தொடர்பாக பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மீட்டியாகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை (071-8591481) அல்லது மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தை (0912260423) தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.




