சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவராகவும் கருதப்படும் ‘கஞ்சிபானி இம்ரான்’ என்பவரை கைது செய்வதற்காக மலேசிய பொலிஸார், இன்டர்போல் மற்றும் இலங்கை பொலிஸின் விசேட குழுவினர் இணைந்து விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான இலங்கை பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளதுடன், இம்ரான் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அந்நாட்டின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் வழிகள் உள்ளிட்ட வெளியேறும் அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரானின் மலேசிய தொடர்புகள் மற்றும் அவரது குழுவுடன் தொடர்புடைய சில உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய பொலிஸ் காவலில் உள்ள இம்ரானின் நெருங்கிய உதவியாளரான ‘ரத்மலானை சைமா’ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இம்ரான் மற்றும் அவரது வலையமைப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரத்மலானை சைமா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கஞ்சிபானி இம்ரான் தனது இருப்பிடத்தை மாற்றி வேறு பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.




