மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுக்கு முன்னரும் பின்னரும் கைதிகள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தி வெளியிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சில கைதிகள் கைத்தொலைபேசி மூலம் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கி, அவர்களை சிறைச்சாலைக்கு அருகில் வரவழைத்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலைக்குள் கைத்தொலைபேசி பயன்பாடு அதிகளவில் காணப்படுவதாகவும், அங்கு நீண்டகாலமாக உள்ள கைதிகள் புதிய கைதிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைத்தொலைபேசி மூலம் அழைப்புகளை மேற்கொள்வதற்கான கட்டணங்கள் பழைய கைதிகள் வழங்கும் கணக்குகளுக்கு ஈசி காஷ் முறையில் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலுக்குப் பின்னர் கைதிகள் வெளியிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிறைச்சாலையின் நிலைமை தொடர்பான தகவல்களை வழங்கி, அவர்களை சிறைச்சாலை முன்பாக ஒன்று திரட்டி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், மஹர சிறைச்சாலையின் சில நிர்வாக நடவடிக்கைகள் நீண்டகாலமாக உள்ள கைதிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய கைதிகள் உணவு, குளியல் மற்றும் நீர் வசதிகளைப் பெறுவதற்கும் பழைய கைதிகளுக்கு பணம் செலுத்த வேண்டிய நிலை காணப்பட்டதாகவும், அந்தப் பணப் பரிமாற்றங்கள் ஈசி காஷ் முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹர சிறைச்சாலைக்குள் கைத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சில சிறை அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு கைதிகளுக்கு கைத்தொலைபேசிகளை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




