தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிசல அரண மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2026.07.19 அன்று மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும், குற்றத்திற்கு உதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணும் 2026.08.02 அன்று மிஹிந்தலை பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், பயணப் பை மற்றும் 280,000 ரூபாய் பணம் வைப்புச் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குரிய இரண்டு ATM அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 47 வயதுடைய மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபர் பெண் 35 வயதுடைய பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்செயலில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் 2026.07.26 அன்று தெல்கந்த பகுதியில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.




