அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மகாவலி ஆற்றை அண்மித்த பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களாக பெய்த மழை, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதன் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை மகாவலி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மிகுந்த அவதானத்துடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து நிலைமைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




