நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரை சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராச்சி தெரிவித்ததன்படி, இந்தப் பயிர்ச்செய்கை பாதிப்புகளால் சுமார் 7,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து, சேதத்தின் அளவை மதிப்பிடும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சபையின் தலைவர் தெரிவித்தார்.
நடப்பு பயிர்ச்செய்கை பருவம் நிறைவடைவதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பயிர்ச்செய்கை சேதங்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்காக தற்போது 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய நிலங்களின் சேதத்தையும் மதிப்பிட்டு, அதற்கேற்ப இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




