நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை மற்றும் குருவிட்ட ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து சிறைச்சாலைகளில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 225 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (10) நடைபெற்ற ‘நாடு ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலைகளில் தற்போது நிலவும் நிலைமை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், கைதிகளிடையே ஏற்படும் அமைதியற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் மனநல மருத்துவர்களின் சேவையை தீவிரமாகப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான இந்த அமைதியின்மை, பின்னர் ஆகஸ்ட் 01 ஆம் திகதி மஹர சிறைச்சாலைக்கும், ஆகஸ்ட் 06 ஆம் திகதி கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலைக்கும் பரவியது.
அத்துடன், ஆகஸ்ட் 07 ஆம் திகதி குருவிட்ட சிறைச்சாலையிலும் பல்லன்சேனை இளைஞர் குற்றவாளிகளுக்கான சீர்திருத்த நிலையத்திலும் இதுபோன்ற மோதல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களில் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளிலேயே அதிகளவான சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




