அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் நோக்கில், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 30,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற 34ஆவது உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பில் உள்ள நெல்லை கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் ஊடாக அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதன்படி, விவசாயம், கால்நடை வளங்கள், காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் முன்வைத்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
30,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக மாற்றி 5, 10, 25 மற்றும் 50 கிலோகிராம் பொதிகளில் விநியோகிப்பதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து விருப்பக் கோரல்களை கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் கோர உள்ளது.
நெல்லை அரிசியாக மாற்றும் விகிதம் மற்றும் அரிசிக்கான பொருத்தமான விலையை நிர்ணயிக்க விலை நிர்ணயக் குழுவொன்றும் செயற்படுத்தப்படவுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம், லங்கா சதொச, தேசிய அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவ நிறுவனம் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
உற்பத்தி செய்யப்படும் அரிசி லங்கா சதொச, கூட்டுறவு வலையமைப்பு மற்றும் தனியார் துறையினூடாக சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.




