போக்குவரத்து துறையின் விரிவான அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டி நகரில் மெட்ரோ பஸ் சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதர வரை நீட்டிக்கப்படவுள்ளதாகவும், பின்னர் அதனை கன்னோருவ வரை இணைக்கும் திட்டமும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், கலகெதர–கட்டுகஸ்தோட்டை பாலம் அகலப்படுத்தும் பணிகளும், பேராதனைப் பாலம் அருகே இரண்டு மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பழைய பேராதனை புகையிரதப் பாலத்தின் புனரமைப்பு இந்த ஆண்டுக்குள் நிறைவடைந்து, அதன்மூலம் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்துவதே இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார்.
